அட.. இங்க பாருங்க.. தடுப்பூசி போட்டால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. அதிரடி அறிவிப்பு.. எங்க தெரியுமா?
புதுச்சேரி: இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா தொற்றை முழுமையாக ஒழிப்பதற்காக நமக்கு கிடைத்திருக்கும் மிகச் சிறந்த ஆயுதம் தடுப்பூசிதான்.
Recommended Video
நமது நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. முதலில் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மக்களை ஊக்குவிக்கின்றனர்
தொடக்க காலத்தில் தடுப்பூசி போட தயக்கம் காட்டிய மக்கள், தற்போது ஓரளவு ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அதே வேளையில் தடுப்பூசி போட ஆர்வம் காட்டாத மக்களை தடுப்பூசி போட வைக்க நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு பரிசுகள், பிரியாணி போன்ற இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என்ற அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலவச முகாம்
அதாவது புதுச்சேரி வில்லியனுர் ஆரம்ப சுகாதார சுகாதார நிலையம் சார்பில் வில்லியனூரில் இயங்கிவரும் அக்ஷயா என்டர்பிரைசஸ் எச்.பி பெட்ரோல் பங்க் நிறுவனம் மற்றும் ஹோட்டல் அக்ஷரதா இணைந்து வருகிற 26.06.2021 சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை தடுப்பூசி முகாம் நடத்துகிறது. புதுச்சேரி-வில்லியனுர் பைபாஸ் சாலையில் உள்ள அக்ஷயா என்டர்பிரைசஸ் எச்.பி பெட்ரோல் பங்க்-கில் இந்த முகாம் நடைபெறுகிறது.

1 லிட்டர் பெட்ரோல் இலவசம்
இந்த சிறப்பு இலவச தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் ஒவ்வொரு நபர்களுக்கும் அரை லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் முன்களப் பணியாளர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆட்டோ டிரைவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அக்ஷயா என்டர்பிரைசஸ் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

குலுக்கல் முறையில் பரிசு
தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் கார்டு அல்லது ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகல் எடுத்து வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு சுகாதாரத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களில் தினந்தோறும் 25 நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications