புதுவைக்கு வந்த பிரான்ஸ் நாட்டுக்காரர்.. கொரோனா அறிகுறியுடன் ஜிப்மரில் அனுமதி!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வருகின்ற 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துளார்.
இதன்காரணமாக புதுச்சேரி எல்லைப் பகுதிகளான கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, முள்ளோடை பகுதிகளில் தமிழக பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படாமல், திருப்பி அனுப்பப்படுகின்றன. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வருபவர்கள் மட்டும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி - தமிழக எல்லையான முள்ளோடை பகுதியில் மருத்துவ குழுவினருடன், போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது கடலுாரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர். அதில் காரில் வந்த ஒரு நபருக்கு கொரோனா நோய் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்பதும், சுற்றுலாவிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்ததும், தற்போது கும்பகோணத்தில்இருந்து சென்னை செல்வதும் தெரிய வந்தது. இதனையடுத்து, மருத்துவ குழுவினர், அவரையும், அவரது கார் ஓட்டுநரையு தனிமைப் படுத்தி போலீஸ் பாதுகாப்புடன் ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் வந்த பிறகே, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பது தெரிய வரும்.