இனி வீடியோ எடுக்காதீங்க.. புதுவை ஆட்டோ- பஸ் மோதலில் மஞ்சள் கோட் அணிந்த பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
புதுவை: புதுவையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அந்த ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அங்கிருந்த பெண் ஒருவர் மீட்டு அவர்களை கட்டி அணைத்து ஆறுதல் கூறிய விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையை அடுத்த அரும்பார்த்தபுரத்தில் நேற்று காலை 8 பள்ளி மாணவியர்களுடன் தனியார் தொடக்க பள்ளிக்கு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவர் ஓட்டினார்.

புதுவை புஸ்ஸி வீதி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை அருகே அனுமதியில்லாத பாதையில் எதிரே வேகமாக பேருந்து வந்தது. இந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பக்கம் நசுங்கியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 8 மாணவிகளும் ஆட்டோ டிரைவரும் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய மாணவிகளை மருத்துவமனைக்கு பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அவர்களுக்கு ஆறுதல் கூறினர். போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியானது. அதில் ஒன் வேயில் தவறாக தனியார் பேருந்து அதிகவேகமாக வந்ததும், அது போல் ஆட்டோவும் வேகமாக வந்ததும் தெரியவந்தது. மேலும் இந்த விபத்து நடந்த பகுதியில் வீடு இருப்பது தெரிகிறது. விபத்து நடந்ததும் மாணவிகளை காப்பாற்ற சில பெண்கள் ஓடி வருகிறார்கள்.

அப்போது நசுங்கிய ஆட்டோவில் உள்ளே இருந்த மாணவிகளை ஆட்டோ டிரைவர் மீட்டு இறக்கிவிடுகிறார். 10 முதல் 12 வயதுக்குள்பட்ட அந்த மாணவிகளோ மிகுந்த அச்சத்திலும் வலியிலும் அழுகிறார்கள். உடனே அங்கிருந்த பெண் அந்த மாணவிகளை கட்டி அணைத்து ஒரு வீட்டின் வராண்டாவில் நிற்க வைக்கிறார். இது போல் ஒவ்வொரு மாணவியையும் அவர் ஆசுவாசப்படுத்தும் காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலத்தில் கண்ணெதிரே உயிர் போனாலும் அதை வீடியோ எடுத்து பேஸ்புக், ட்விட்டரில் போட்டு லைக்ஸ்களை வாங்கத்தான் பார்க்கிறார்களே தவிர அந்த உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருப்பதே இல்லை. தன் உயிரை துச்சமாக கருதி பலர் கடற்கரையிலும், ஆறு, ஏரிகளில் தத்தளிக்கும் உயிர்களை காப்பாற்றுவோருக்கு மத்தியில் வீடியோ எடுக்கவும் செய்கிறார்கள். இனியாவது இந்த சிங்கப்பெண்ணை போல் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுங்கள்.












Click it and Unblock the Notifications