16 பேர் நிலை கவலைக்கிடம்.. புதுச்சேரி ஜிப்மர் வெளியிட்ட ஷாக் தகவல்.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!
புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 40 பேர் உயிரிழந்து உள்ளனர். 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்குரியதாக உள்ளதாக கூறப்படுகிறது.

19 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 3 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 16 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களின் நிலை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஜிப்மர் மருத்துவமனையில் விஷச் சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான முறையில் உள்ளனர். அதில் 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 பேருமே இங்கு அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவக் குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், கள்ளச்சாராய பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கும் உரிய உயர்தர சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications