கூலிப்படைகளை ஒழிக்க வேண்டும்.. பாமக மா.செ குடும்பத்தை சந்தித்த பிறகு அன்புமணி ஆவேசம்..!
புதுச்சேரி: கூலிக்கு கொலை செய்யும் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பாமக மாவட்டச் செயலாளர் தேவமணி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து அன்புமணி ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், நீதி கிடைக்கும் வரை பாமக ஒரு போதும் ஓயாது எனக் கூறி அவர்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் அளித்தார். அந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

108 மதுக்கடைகள் மூடல்
காரைக்கால் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தளபதியாக தேவமணி திகழ்ந்ததாக பெருமிதம் தெரிவித்தார். ''கல்வி, திருமணம் என எந்த வகையான உதவி கேட்டு, யார் வந்தாலும் உதவி செய்யக்கூடியவர் என்றும், மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி 108 மதுக்கடைகளை மூட வைத்தவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

பின்னணியில் சூழ்ச்சி
மாவட்டச் செயலாளர் தேவமணியின் படுகொலைக்கு நீதி பெற்றுத் தரும் வரை பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது என்ற உறுதியை அன்புமணி அளித்தார். மேலும், இந்தக் கொலைப் பின்னணியில் மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதாக தனக்கு செய்திகள் வந்து கொண்டிருப்பதாகவும் இந்தக் கொலையின் பின்னணியில் காவல்துறையை சேர்ந்த ஒரு சிலர் இருப்பதாக செய்திகள் வருவதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

உண்மை குற்றவாளிகள்
பாமக மாவட்டச் செயலாளர் கொலை தொடர்பாக அண்மையில் 4 பேரை காவல்துறை கைது செய்திருந்தாலும் கூட, உண்மையான குற்றவாளிகள் இன்னும் வெளியில் தான் உள்ளதாக தெரிவித்தார். கூலிக்கு படுகொலை செய்யும் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அன்புமணி, இத்தகைய கூலிப்படையினர் மீது புதுவை அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கூலிப்படை
தேவமணி படுகொலை தொடர்பாக சரியான முறையில் காவல்துறை விசாரணை நடத்தாவிட்டால் பா.ம.க. கடுமையான போராட்டங்களை நடத்தும் என எச்சரிக்கை விடுத்தார். சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கூலிப்படையினரை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர் மற்றும் ஆளுநரை அன்புமணி ராமதாஸ் விரைவில் சந்திப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications