என்னை சந்திக்க பனையூருக்கு வாங்க! ராமதாஸ் முன்பே மைக்கை தூக்கி போட்ட அன்புமணி
புதுவை: புதுவையில் நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸுடன் கடும் வாக்குவாதம் செய்த அன்புமணி நீண்ட நேரமாக கால்களை ஆட்டிக் கொண்டே உட்கார்ந்திருந்தார். பிறகு வாக்குவாதம் முடிந்ததும் மைக்கை தூக்கி போட்டார். இந்த சம்பவத்தை பார்த்த தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பாமகவின் இளைஞரணி சங்க தலைவராக முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் இருந்தார். இந்த நிலையில் அவர் அந்த பதவியிலிருந்து விலகிவிட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று புதுவையில் நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதாவது ராமதாஸ் பேசுகையில், பாமக தலைவர் அன்புமணிக்கு உதவி செய்ய இளைஞரணி சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிக்கிறேன் என்றார்.
அப்போது அன்புமணி குறுக்கிட்டு, "யாருக்கு எனக்கு உதவி செய்யவா, அதெல்லாம் வேண்டாம். கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இத்தனை பெரிய பொறுப்பை வழங்குவதா, ஏன் அந்த பொறுப்பிற்கு திறமையான ஆட்களே இல்லையா" என கோபமாக கேட்டார்.
அப்போது ராமதாஸ், "இது என் கட்சி, நான் சொல்வதை மட்டும்தான் எல்லாரும் கேட்க வேண்டும். விருப்பமில்லாதவர்கள் வெளியே போகலாம்" என்றார். அப்போது அன்புமணி கால்களை ஆட்டிக் கொண்டு கேஷுவலாக சிரித்தபடியே உட்கார்ந்திருந்தார்.
அப்போது ராமதாஸ், நான் மீண்டும் சொல்கிறேன், இளைஞரணித் தலைவர் முகுந்தன்தான் என்றார். அதற்கு அன்புமணி, இப்படியே குடும்ப கட்சியாக்கிவிடுங்கள் என கூறினார்.
மேலும் அன்புமணி மேடையில் இருந்து எழுந்து நின்று, நான் பனையூரில் புதிதாக கட்சி அலுவலகம் ஆரம்பித்திருக்கிறேன். அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என கூறிவிட்டு மைக்கை மேஜையில் தூக்கி போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.
முகுந்தன், அன்புமணியின் அக்கா காந்திமதியின் மகன். அவருக்குத்தான் பதவியை கொடுக்க அன்புமணி எதிர்த்தார். இளைஞரணி தலைவர் பதவியை வகித்து வந்த ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், லைகாவில் பணியாற்றி வருகிறார்.
பாமக தலைவர் பதவியை ஜி.கே.மணி அன்புமணிக்கு விட்டுக் கொடுத்ததற்காக இந்த பதவி தமிழ் குமரனுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதையும் அன்புமணி எதிர்த்தார். கட்சியினரும் எதிர்த்தனர். இந்த நிலையில் தமிழ்க்குமரனே அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட்டார்.
இந்த நிலையில்தான் தனது அக்காள் மகன் முகுந்தனுக்கு இந்த பதவியை கொடுத்த போது அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். நீண்ட நாட்களாக அப்பாவுக்கும் மகனுக்கும் இருந்த பனிப்போர் இன்று மோதலாக வெடித்தது என சொல்கிறார்கள்.
இதுகுறித்து எம்எல்ஏ அருள் கூறுகையில், இதெல்லாம் சின்ன விஷயம், இன்றைக்குள் இருவரும் சமாதானமாகிவிடுவார்கள். இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்றார்.கட்சி நிர்வாகிகள் பலரும் அன்புமணி வாழ்க என கோஷமிட்டனர். அது போல் நடுத்தர வயதில் இருப்போரும் வயதானவர்களும் ஐயா வாழ்க என கோஷமிட்டனர்.
இளைஞரணி தலைவர் பதவி என்பது கட்சி தலைவருக்கு இணையானதை போன்ற பதவியாகும். இதற்கு அனுபவசாலியை நியமிக்குமாறு அன்புமணி கூறுகிறார். ஆனால் ராமதாஸோ அதை மறுக்கிறார். இதனால்தான் அன்புமணிக்கு கோபம் வந்துள்ளது.
பனையூரில் புதிய அலுவலகம் குறித்து அன்புமணி அறிவித்துள்ள நிலையில் இது ஏற்கெனவே திட்டமிட்டு புதிய அலுவலகம் அமைக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications