தவெகவில் இணைந்த அன்றே சீட் கொடுத்த விஜய்.. பாஜகவில் இருந்து தாவி உடனே வேட்பாளர் ஆன சாய் சரவணன்!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில், ஊசுடு தொகுதியில் போட்டியிட சீட் தராததால் முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமார், பாஜகவில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று தவெகவில் இணைந்த அவருக்கு திருபுவனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தவெக கட்சியில் இணைந்த முதல் நாளிலேயே தேர்தலில் போட்டியிடுவதற்கு சாய் சரவணனுக்கு விஜய் சீட் வழங்கியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. 30 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்று மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
ஆட்சியைத் தக்க வைத்து கொள்ள என்.ஆர் காங்கிரஸ் - பா.ஜ.க - அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் - திமுக அடங்கிய கூட்டணியும் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. புதிதாக களமிறங்கிருக்கும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மட்டுமின்றி புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் தவெக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால், அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி எம்.எல்.ஏ திடீரென பா.ஜ.கவில் இருந்து விலகியுள்ளார். பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பா.ஜ.கவுக்கு 10 தொகுதிகளும், அதிமுகவுக்கு 2 தொகுதிகளும், லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுமான சாய் சரணவனனுக்கு பா.ஜ.க இந்த முறை சீட் வழங்கவில்லை. ஊசுடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்காத காரணத்தால் அதிருப்தி அடைந்த சாய் சரவணன் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
முன்னதாக நேற்று ஊசுடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் சாய் சரவணன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் புதுச்சேரியில் உள்ள மாநில பா.ஜ.க அலுவலகத்தில் புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கட்சித் துண்டுகளை கழற்றி வீசியும், உறுப்பினர் அட்டையை எரித்தும் போராட்டம் நடத்தினர். அங்கு உள்ளவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் சில ஆண்டுகள் சாய் சரவணன் அமைச்சர் பதவியில் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய சாய் சரவணன் இன்று விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார்.
இந்நிலையில், தவெக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சாய் சரவணன். புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் எனும் நிலையில், 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் விஜய். திருபுவனை தொகுதியில் சாய் சரவணன் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியில் இணைந்த அன்றே தேர்தலில் போட்டியிடுவதற்கு விஜய் சீட் வழங்கியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications