அதிமுகவை பயன்படுத்த விரும்பும் பாஜக.. ஓபிஎஸ், இபிஎஸ் சிந்திக்க வேண்டும்.. டி.ராஜா வலியுறுத்தல்!
புதுச்சேரி: அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அதிமுகவின் இரு அணிகளும் சிந்திக்க வேண்டும் என்று சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் , மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளால், இந்தியா அரசியல், பொருளாதாரம், சமூகம் என பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. நாட்டின் சுதந்திரத்துக்காக இவர்கள் போராடியதைப் போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
ஓபிஎஸ் வசமான அதிமுக.. அலுவலக சாவி யாருக்கு?.. பன்னீர் வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
பாஜக மீது விமர்சனம்
சாதிய ஆதிக்கத்தில் ராஜஸ்தானில் பழங்குடியின சிறுவன் தாக்கப்பட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதலில், இதுபோன்ற சனாதனக் கொள்கையை பாஜக தூக்கிப்பிடிக்கிறது. நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினிச் சாவில் முன்னிலை என்ற நிலைக்கு நாடு சென்று கொண்டிருக்கிறது.
சிறுபான்மை மக்கள்
சிறுபான்மை சமூக மக்கள் மீது இதுவரை கண்டிராத அடக்குமுறைகள், கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தலித்துகள், பழங்குடி மக்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ஒருபுறம் அரசியல் நெருக்கடி என்றால், இன்னொரு புறம் பொருளாதார நெருக்கடி. மற்றொருபுறம் சமூக ரீதியாக இந்தியாவில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
சிபிஐ வலியுறுத்தல்
இந்தச் சூழலில் நாடு, ஜனநாயகம், கூட்டாட்சி நெறிமுறைகள், அரசியல் சட்டம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக மதசார்ப்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை சிபிஐ வலியுறுத்தி வருகிறது. வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.
பிகாரில், பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு நிதீஷ்குமார் வெளியேறி ஆட்சியமைத்தது நாடு முழுவதும் எழுச்சியை உருவாக்கியுள்ளது. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை. ஆளுநர் மூலம், மாநில அரசைப் புறக்கணித்து, மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது.
அதிமுக விவகாரம்
தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிமன்ற அளித்த தீர்ப்பு குறித்து அதிமுகவின் இரு அணிகளும் சிந்திக்க வேண்டும். ஆனால், இப்போது அதிமுக கொள்கை இல்லாத நிலையில் சீர்குலைந்து வருகிறது. அதனை பாஜக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. இதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.