புதுச்சேரியில் பயங்கரம்.. வெடிகுண்டு தயாரித்த ரவுடி.. திடீரென வெடித்ததில் கை காலி
புதுச்சேரி: புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில், ரவுடியின் கை துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அருகே உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்தவர் ரவி(26). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் எதிரிகளை கொல்ல திட்டமிட்ட ரவி, துத்திபட்டு மைதானம் அருகே தனது நண்பர்களான சரண், ராஜூவுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது, எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்தது.
இதில், ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டு கை துண்டானது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் ரவியை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ரவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சேதராப்பட்டு போலீசார் மருத்துவமனையில் உள்ள ரவியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரவியின் நண்பர்களான சரண் மற்றும் ராஜூவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே சம்பவ இடத்தை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா தலைமையில் சேதராப்பட்டு போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள், அதை தயாரிக்க பயன்படுத்தபட்ட மூலப்பொருள்கள, செல்போன், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
தலையில் கல்லைப் போட்டு கொலை
புதுச்சேரி நகரின் மையப்பகுதியான நெல்லித்தோப்பில் மார்க்கெட் உள்ளது. இங்கு இறைச்சி கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு விடியற்காலையிலேயே கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுவது வழக்கம்
இந்நிலையில் மார்க்கெட்டில் உள்ள கறிக்கடை ஒன்றில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள காய்கறி கடையில் வேலை பார்த்து வந்த சேகர் என்பவருக்கும் தமிழ்வாணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இன்று அதிகாலை தமிழ்வாணன் கறிகடையில் தூங்கிக்கொண்டிருந்த போது, சேகர் கல்லை தூக்கி தமிழ்வாணனின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் சேகர் சரண் அடைந்துள்ளார்.
கொலை குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.