தீமிதி திருவிழா.. திடீரென தீயில் விழுந்த மாணவன் “அய்யோ.. பதறியடித்து ஓடிய பக்தர்கள்" - நடந்தது என்ன?
புதுச்சேரி: புதுச்சேரி கோவில் திருவிழாவில் மாணவர் ஒருவர் தீக்குழியில் விழுந்த சம்பவம், அங்கிருந்தோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி திலாஸ்பேட்டை பகுதியில் உள்ள தர்மராசா பாஞ்சாலியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது தீக்குழியில் இறங்கிய மாணவர் ஒருவர் திடீரென தவறி விழுந்தார்.
இதில் அந்த மாணவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மாணவர் தீக்குழுயில் தவறி விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கோவில் திருவிழா
புதுச்சேரி திலாஸ்பேட்டை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ தர்மராசா பாஞ்சாலியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் கடந்த 10-ஆம் தேதி இந்த கோவில் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

முதல்வர் பங்கேற்பு
இந்த திருவிழாவில் புதுச்சேரி முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றனர்.

தீமிதி திருவிழா
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா கோவில் அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழியில் இறங்கி அம்மனுக்கு தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். மேலும் பூக்குழியில் இறங்கி பக்தர்கள் தீ மிதித்துக் கொண்டிருக்கும்போது மாணவர் ஒருவரும் தனது உறவினரோடு சேர்ந்து தீ மிதித்தார்.

மாணவன்
அப்போது அந்த மாணவர் திடீரென நிலை தடுமாறி தவறி தீயில் விழுந்தார். உடனே, பலர் பதறியடித்து அவரைத் தூக்க ஓடி வந்தனர். அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார், பக்தர்கள் அந்த மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தீக்குழியில் தவறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த மாணவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications