ஜிப்மர் சோதனையில் கொரோனா நெகட்டிவ்.. அரசு மருத்துவமனை சோதனையில் பாசிட்டிவ்.. ஒரே குழப்பமா இருக்கே
புதுச்சேரி: மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா இல்லை என திருப்பி அனுப்பப்பட்ட கோயம்பேட்டிலிருந்து வந்த தொழிலாளிக்கு, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி செய்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை கோவிட்19 மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு புதுவை, தமிழகம் மற்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்களுக்கான கோவிட்19 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டுமென நேற்று முன்தினம் புதுச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று இல்லை என ஜிப்மர் மருத்துவமனையால் திருப்பி அனுப்பப்பட்ட கூலித்தொழிலாளிகளுக்கு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றி வந்துள்ளார். சென்னையில் ஒரு ஓட்டலில் நான்கு நாட்கள் நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார். பின்னர் விழுப்புரம் சென்று வீட்டுக்கு செல்லாமல் ஓட்டலில் தங்கியுள்ளார். அவருடைய தாயார் ஜிப்மரில் பல்நோக்கு ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கோயம்பேடு தொழிலாளி தனக்கு சளி, இருமல் இருந்ததால் ஜிப்மர் சென்று பரிசோதித்துள்ளார்.

அங்கு கொரோனா இல்லை என்று கூறியதைத் தொடர்ந்து, அவர் புதுச்சேரி அரசின் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர் அங்கே சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் கடந்த 15 நாட்களாக சென்னையில் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அவருடைய நண்பர்கள்ளையும் அடையாளம் கண்டு தொற்று உள்ளதா? என்று பரிசோதிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

ஊரடங்கு கட்டுப்பாட்டு தளர்வின் முதல் நாளன்று இருந்த மக்கள் கூட்டம் போல் தற்போது கூட்டம் இல்லை. மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். வரும் 17 ம் தேதி மத்திய அரசு எடுக்கவுள்ள முடிவை பின்பற்றி மாநில அரசு முடிவு எடுத்து அமல்படுத்தும். அரசின் முடிவுகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். ஜிப்மரில் பணியாற்றுபவர்கள் அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து வருகின்றனர். இதனால் ஜிப்மரிலேயே குடியிருப்பு வசதி செய்து தரும்படி ஜிப்மர் இயக்குநரிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுத உள்ளதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications