புதுச்சேரி பாஜக மாநில செயலாளர் மகேந்திரனுக்கு கொரோனா.. கட்சி தலைமை அலுவலகம் மூடல்
புதுச்சேரி: புதுச்சேரி பாஜக மாநில செயலாளர் மகேந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகம் மூடப்பள்ளது. மேலும் அவரது தொடர்பில் இருந்த கட்சி நிர்வாகிகளை கண்டறியும் பணி நடக்கிறது.
புதுச்சேரி எல்லப்பிளைச்சாவடி ரத்தினம் நகரை சேர்ந்த பாஜக மாநில செயலாளர் மகேந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர், கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளார். இதன் காரணமாக இந்திராகாந்தி சிக்னல் அருகே உள்ள, பாஜக தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாஜக அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு அறைகள் திறக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் கட்சி அலுவலகத்தில் தன்னிடம் தொடர்பில் இருந்த 8 நிர்வாகிகள் உள்ளிட்டோரின் பெயர் விபரத்தை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், அவர் கொடுத்து உள்ளார். இதனால் அவர்களையும் பரிசோதிக்க சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பாஜக மாநில செயலாளர் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் முககவசம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் சென்னை சென்று வந்தபோது நோய்த்தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தொற்று ஏற்பட்டதை போல தொழிற்சாலையில் பணியாற்றிய ஐந்து ஊழியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொழிற்சாலையில் பணியாற்றும் 35 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications