நிபா தாக்கியதாக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட கடலூர் நபர் பலி.. தீவிர சிகிச்சைக்குப் பிறகு மரணம்
புதுச்சேரி: கடலூரை சேர்ந்த நபர் ஒருவர் கேரள மாநிலத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடுமையான காய்ச்சலுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் புதுசத்திரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி நடராஜன் (55). இவர் கேரள மாநிலம் குருவாயூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் தனது சொந்த ஊரான கடலூர் அருகேயுள்ள புதுசத்திரத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார். தொடர் காய்ச்சலை அடுத்து கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் காய்ச்சல் குறையாததால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 9 ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
கேராளாவில் இருந்து வந்ததால் அவருக்கு நிபா வைரஸ் தாக்கியிருக்ககூடும் என கருதி அவருக்கு ஜிப்மரில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதனிடையே அவருடைய ரத்த மாதிரிகளை நிபா வைரஸ் சோதனைக்காக புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு ஜிப்மர் மருத்துவமனை அனுப்பி வைத்திருந்தது. கிட்டத்தட்ட 4 நாட்கள் புனேவில் நடத்தப்பட்ட ஆய்வில் அவருக்கு நிபா வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது.

நடராஜனுக்கு நிபா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இருப்பது வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம். உரிய சிகிச்சை அளித்தால் அந்த வைரஸ் காய்ச்சல் சரியாகி விட வாய்ப்பு உள்ளதாக புனே மருத்துவர்கள் ஜிப்மர் நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்
இருந்த போதிதும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இச்சூழலில் நேற்று சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம், நடராஜன் மூளை காய்ச்சலுடன் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
மேலும் புதுச்சேரியில் ஜிப்மர், அரசு பொது மருத்துவமனை என இரு இடங்களில் நிபா வைரசிலிருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு வார்டுகள் அமைத்து போதிய சாதனங்கள் அங்கு பணிபுரிவோருக்கு தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications