புதுச்சேரியில் பரவி வரும் டெங்கு.. ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு.. தீவிர கண்காணிப்பு
புதுச்சேரி: டெங்கு காய்ச்சல் பாதிப்பால் புதுச்சேரியில் ஒரே நாளில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெயிலும் மழையும் மாறி புதுவித சீசனாக இருப்பதால் மக்களுக்கு காய்ச்சல், மெட்ராஸ் ஐ உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் கொசுவினால் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

புதுச்சேரியிலும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் குமாம்பேட் வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கடுமையான காய்ச்சல் காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை திடீரென சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
இது குறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மாணவி இன்று காலை உயிரிழந்தார்.
இதே போல ஜிப்மர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தர்மபுரி நடுத்தெருவை சேர்ந்த மீன ரோஷினி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் பரவி வரும் நிலையில் புதுச்சேரியில் ஒரே நாளில் 2 பெண்கள் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அரசு விரைவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications