உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 'இந்தியா' கூட்டணியில் இணைந்துள்ள திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 6 தொகுதிகளில் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் புதுச்சேரி அரசியல் களம் மேலும் பரபரப்பாகியுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. தேர்தலை முன்னிட்டு, கூட்டணி பேச்சுவார்த்தை ஏற்பட்ட தாமதம் காரணமாக திமுக மற்றும் காங்கிரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை வைத்து வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன.

பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், திமுகவுக்கு 13 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டதாக ஒரு வழியாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல்
அதன்படி, வில்லியனூர், மங்களம், திருபுவனை, பாகூர், முதலியார்பேட்டை, உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, ராஜ்பவன், காலாப்பட்டு, கதிர்காமம், காரைக்கால் தெற்கு, டி.ஆர்.பட்டினம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், உழவர்கரை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட்டணிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது.
விசிக தனித்து போட்டி
குறிப்பாக, ஊசுடு மற்றும் நெட்டப்பாக்கம் தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தது புதிய சிக்கலை உருவாக்கியது. மேலும், உழவர்கரை தொகுதியையும் ஏற்க மறுத்து, மூன்று தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அவர் தெரிவித்திருப்பது கூட்டணியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட சில தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் மனுவை திரும்பப் பெற மறுத்துள்ளனர்.
திமுக காங்கிரஸ் மோதல்
குறிப்பாக காலாப்பட்டு, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, மங்களம் மற்றும் திருபுவனை உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதனால் இந்த தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேருக்கு நேர் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. மேலும் சில இடங்களையும் சேர்த்து மொத்தம் 6 தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணிக்குள் அதிருப்தி
காங்கிரஸ் கட்சியின் இந்த போக்கு கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மற்ற கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை திரும்பப் பெறச் செய்வதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், சில வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற மறுத்து, ஏற்கனவே தங்கள் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணிகளை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணி
இதற்கிடையில், புதுச்சேரி தேர்தலில் மற்றொரு அணியாக என்.ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக, ஆகிய கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும் களமிறங்கியுள்ளது. மறுபுறம், காங்கிரஸ் - திமுக - கம்யூனிஸ்ட் கட்சிகள் - விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை இணைந்த இந்தியா கூட்டணியும் தேர்தலில் மோதுகின்றன. இந்நிலையில், கூட்டணிக்குள் ஏற்பட்ட இந்த குழப்பம் மனு வாபஸ் பெறும் கடைசி நாளுக்குள் தீர்க்கப்படுமா என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. ஒருவேளை இந்த பிரச்சினை தீர்க்கப்படாமல் நீடித்தால், கூட்டணிக்குள் நேரடி போட்டி அதிகரித்து, தேர்தல் முடிவுகளில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.











Click it and Unblock the Notifications