மின்சார வாரியம் அதிரடி.. ஏறிய கரண்ட் பில்.. நேரா "பிள்ளையார்" கிட்ட போன காங்கிரஸ்.. புதுச்சேரி புதுமை
புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டி உள்ளது. அந்தவகையில், காங்கிரஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் விநாயகர் சதுர்த்தி விழா, இணையத்திலும் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?
புதுச்சேரியில் ஒவ்வொரு வருடமும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 2024-25ம் ஆண்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்த மின் துறை முடிவு செய்தது.

கருத்துக் கேட்பு: அதற்காக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், புதுச்சேரி மின்துறை மற்றும் மின் திறல் குழுமம் மனு தாக்கல் செய்யப்பட்டதுடன், மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் பொதுமக்களிடமும் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுமக்கள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பிறகு எம்பி தேர்தல் வந்ததால், மின் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மின் கட்டணத்தை தற்போது உயர்த்தி அறிவித்துள்ளது.. அந்தவகையில், புதுச்சேரியில் மின் கட்டணம் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
கரண்ட் பில் உயர்வு: மின் கட்டண உயர்வுக்காக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட எந்த விவரமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு காரணமே, இந்த கரண்ட் பில் உயர்வுதான் என்றும், பயன்படுத்திய மின் யூனிட்டுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்காமல் கூடுதலாக பலவித கட்டணங்களை மக்களுக்குத் தெரியாமல் வசூல் செய்வது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டதாகவும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தேர்தலில் மக்கள் தந்த பாடத்தை உணராமல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக, அரசியல் கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
பணம் வசூல்: அதனால்தான், மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும், மின் துறையை தனியார் மயமாக்குவதை நிறுத்தக் கோரியும், பயன்படுத்திய மின்சாரத்துக்கு மட்டுமே பணம் வசூலிக்க வேண்டும் என்றும், கடந்த 2-ம் தேதி மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, விசிக, இடதுசாரி கட்சிகள் அறிவித்தன.. விநாயகர் சதுர்த்திக்கு பிறகு புதுச்சேரியில் பந்த் நடத்தவும் இந்த கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இந்த எதிர்ப்பில் தற்போது காங்கிரசும் இணைந்துள்ளது.. புதுச்சேரியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தியால்பேட்டை பகுதியிலும், பெரிய அளவில் விநாயகர் வைத்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் சார்பில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில், விநாயகள் அருள் பாலிக்கும் கையில், மின் கட்டண உயர்வை சுட்டிக்காட்டி அறிவிப்பு ஒன்றினை காங்கிரஸ்காரர்கள் வைத்திருக்கிறார்கள்.
தனியார் மயம்: அதில் "பக்தர்களே கவலை வேண்டாம்.. மின்சார கட்டண உயர்வில் இருந்தும் மின்துறை தனியார் மையம் ஆவதிலிருந்தும் காப்பாற்றப்படுவீர்கள். 2026 விரைவில்" என்று அச்சிடப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் இப்போது என்ஆர் காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் மின் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. அத்துடன், மின்துறையும் தனியார் மயமாக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் கண்டிக்கும் விதமாகவும், வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தும், காங்கிரஸ் தரப்பு இப்படி நூதனமான முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறது. இந்த போஸ்டர்கள்தான் இணையத்திலும் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications