பிரான்சிலிருந்து விடுமுறைக்கு புதுவை வந்த மகன்.. சொத்து தகராறு.. அடித்தே கொன்ற தந்தை!
புதுச்சேரி: புதுச்சேரியில் சொத்து தகராறில் விடுமுறைக்காக பிரான்சில் இருந்து புதுச்சேரி வந்த மகனை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் இறால் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரது மூத்த மகன் ரஞ்சித் பிரெஞ்சு குடியுரிமை பெற்று, தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி விடுமுறைக்காக ரஞ்சித் தனியாக புதுச்சேரி வந்துள்ளார். பிரான்சில் இருந்து வந்ததில் இருந்தே தனது தந்தை குமாரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குமார் சொத்தை பாகம் பிரித்து பணம் தருவதாக ரஞ்சித்திடம் கூறியதாக தெரிகிறது.
ஆனால் இதை ஏற்க மறுத்த ரஞ்சித் தினந்தோறும் குடித்துவிட்டு தனது தந்தையிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ரஞ்சித், தந்தையிடம் பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார். மேலும் தனது தாயை தலையனையால் அழுத்தி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து ரஞ்சித்தின் முகத்தில் அடித்துள்ளார்.
இதில் மயக்கமடைந்து, கீழே விழுந்த ரஞ்சித்தின், கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு, இரும்பு கம்பியால் ரஞ்சித்தின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரஞ்சித் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மகனை கொலை செய்துவிட்டு, காவல்நிலையத்திற்கு தந்தை குமாரே புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம் காவல் நிலைய போலீசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளி குமாரை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையே மகனை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.