ஓவர் தொல்லை.. வளைத்துப் பிடிக்கப்பட்ட ஜோதிடர்கள்.. கூண்டோடு பச்சைக் கிளிகள் பறிமுதல்
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரியில் கிளி ஜோதிடர்களை போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர். பொதுமக்களை ஜோதிடம் பார்க்க வலியுறுத்தி தொல்லை கொடுத்ததாகவும், கிளிக்கு டார்ச்சர் கொடுத்ததாகவும் அவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் கடற்கரை, அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், பாரதி பூங்கா உள்ளிட்ட இடங்களை காண்பதற்காக நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு சுற்றுலா வருபவர்களுக்கு சிலர் கிளி ஜோதிடம் பார்த்து வருகின்றனர். இந்த இடங்களில் ஏகப்பட்ட கிளி ஜோதிடர்களைப் பார்க்கலாம்

தொல்லையாப் போச்சே
ஒருசில நேரங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு கிளி ஜோதிடம் பார்க்க விருப்பமில்லை என்று கூறினாலும் கூட, கிளிஜோடர்கள் அவர்களை ஜோதிடம் பார்க்க சொல்லி தொந்தரவு கொடுப்பதாகவும், கிளிகளை துன்புறுத்துவதாகவும் வனதுறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

ரெய்டு விட்ட அதிகாரிகள்
புகாரின்பேரில் வனத்துறை ஊழியர்கள் கடற்கரை சாலையில் இன்று திடீரென ரோந்து சென்றனர். அப்போது அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக்கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த கிளி ஜோதிடர்கள் முருகன், குப்புசாமி, சங்கரன், ராமசாமி ஆகியோரை பிடித்து வனத்துறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

கூண்டோடு பறிமுதல்
மேலும் அவர்களிடம் இருந்து கிளி ஜோதிடம் பார்க்க பயன்படுத்திவந்த பச்சைக்கிளிகள் மற்றும் பெட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுச்சேரியும் இடம்பெற்றுள்ளது. இதனால் புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வேண்டாம் ஜோதிடம்
இந்த நிலையில் புதுவை, நகரின் அழகை கெடுக்கும் வகையில் ஆங்காங்கே சாலையில் அமர்ந்து கிளி ஜோதிடம் பார்ப்பவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து அப்புறப்படுத்த வேண்டுமென்பதே உள்ளூர் வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications