வெயிலுக்கு இதமா புதுச்சேரி சாலை சிக்னல்களில் அரசு செய்த அசத்தலை பார்த்தீங்களா? மனசார மக்கள் பாராட்டு
புதுவை: போக்குவரத்து சிக்னல்களில் புதுவை அரசு பசுமை பந்தல்களை அமைத்துள்ளது. இந்த பந்தல்கள் பொதுப் பணித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவையில் கடந்த ஜனவரி மாதம் இறுதி முதலே வெயில் வாட்டி வதைத்துள்ளது. காலை 7 மணிக்கே உச்சி வெயில் போல் வாட்ட துவங்குகிறது. இதனால் பணி நிமித்தமாகவும் கல்வி நிமித்தமாகவும் அத்தியாவசிய பணிகளுக்காகவும் கட்டாயமாக வெளியே செல்ல வேண்டியவர்கள் வெயிலில் வாடி வருகிறார்கள்.

பிற்பகல் 4 மணி வரை வெப்பம் தகித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். சாலைகளில் அவ்வப்போது மரத்தின் நிழல்களில் நிறுத்தி நிறுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆங்காங்கே ஜூஸ் கடைகள், கூழ் கடைகள், மோர், கற்றாழை ஜூஸ் கடைகள், பழக்கடைகள், இளநீர் கடைகள் முளைத்துள்ளன. இங்கு வயிற்றுக்கு குளிர்ச்சியாக வாங்கி உண்டுவிட்டு பிறகு தங்கள் பயணத்தை தொடங்குகிறார்கள். எனினும் அத்தியாவசிய தேவை இல்லாதோர் உச்சி வெயிலில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.
வாகனங்களில் சென்று கொண்டே இருந்தால் கூட அனல் காற்றாவது வீசும், ஆனால் சிக்னல்களில் நிற்கும் போது கொளுத்தும் வெயில் மண்டையை பிளக்கும் வகையில் இருக்கிறது. சில இடங்களில் மேம்பாலங்களின் அடியில் வரும் டிராபிக் சிக்னல்களில் மக்கள் காத்திருந்தாலும் , பல இடங்களில் மொட்டை வெயிலில் வாடும் நிலை உள்ளது.

இந்த நிலையில் புதுவையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் புதுவையில் உள்ள 4 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. புதுவை கலெக்டர் குலோத்துங்கன், பொதுப் பணித் துறை, உழவர்கரை நகராட்சி மூலம் பசுமை பந்தலை அமைக்க உத்தரவிட்டார்.
பொதுப் பணித் துறை மத்திய கோட்டம் சார்பில் அஜந்தா சிக்னல், ஒதியஞ்சாலை சிக்னல், ராஜா தியேட்டர் சிக்னல், முருகா தியேட்டர் ராஜீவ் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர சோதனை முறையில் ஒரு சிக்னலில் நிரந்தர நிழல்குடையை அமைக்கவும் புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications