செவிலியர்களை கையெடுத்து கும்பிட்ட ஆளுநர் கிரண்பேடி.. சேவை சிறக்க வாழ்த்து.. நெகிழ்ச்சி!
புதுச்சேரி: உலக செவிலியர் தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் செவிலியர்களை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கையெடுத்து கும்பிட்டு அவர்களின் சேவை சிறக்க வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Recommended Video

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 உலக செவிலியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உலக செவிலியர் தினத்தையொட்டி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, மருத்துவமனையில் பணிபுரியும் தலைமை செவிலியர்கள், செவிலியர்கள், பயிற்சி மாணவிகள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்தனர். இதில் முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதனிடையே புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்த ஆளுநர் கிரண்பேடி, செவிலியர்களை கையெடுத்து கும்பிட்டு தலை வணங்கி நன்றி தெரிவித்தார். அப்போது அவர் ''இது உங்களுடைய நாள். இந்நாளில் எங்களுக்காக சேவை புரியும் உங்களுக்கு அனைவரின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் ஒருவரை மட்டுமே காக்க முடியும்.

அது அன்பின் காரணமாக இருக்கலாம். நீங்கள் ஆயிரம் பேருக்கு உளமாற சேவை செய்கிறீர்கள்'' என்று கூறி வாழ்த்து தெரிவித்தார். செவிலியர்களுக்கு வாழ்த்து கூறும் வீடியோவை தனது வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ள கிரண்பேடி, பச்சை, நீலம், காக்கி மற்றும் வெள்ளை கோட் அணிந்துள்ளவர்களுக்கு வீர வணக்கம் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications