புதுச்சேரியில் மீண்டும் விஷவாயு கசிவு? வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் - போலீசாருடன் வாக்குவாதம்
புதுச்சேரி: புதுச்சேரியில் யில் மீண்டும் விஷவாயு வெளியேறியதாக பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி சாலைமறியல் செய்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கலைந்து போக கூறிய போலீசாருக்கும், அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளார். இந்நிலையில் தான் கடந்த மாதம் 11ம் தேதி புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள புதுநகரில் திடீரென்று விஷவாயு கசிந்தது.

இதில் மாணவி உள்பட 3 பெண்கள் பலியாகினர். மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். வீட்டு கழிவறையில் இருந்து விஷவாயு வெளியேறியது தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
மேலும் சம்பவம் குறித்து விசாரிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடை உள்பட பல இடங்களில் சீரமைப்பு பணி நடந்தது. இந்நிலையில் தான் கடந்த 2 நாட்களாக ரெட்டிபாளையம் புதுநகர், கம்பன் நகர், மூகாம்பிகை நகர் பகுதியில் நாற்றம் வீசியுள்ளது. இந்நிலையில் தான் இன்று விஷவாயு வெளியேறியதாக தகவல் பரவியது.
இதையடுத்து புதுநகர், கம்பன் நகர், மூகாம்பிகை நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தை தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு பொதுமக்கள் மறியலால் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.
இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் மற்றும் மக்கள் பிரதிநதிகள் வந்து பொதுமக்களிடம் பேசி கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. விஷவாயு நாற்றம் வருகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். கடந்த மாதம் 3 பேர் பலியான நிலையில் அச்சத்துடன் எங்களால் வாழ முடியாது. உடனே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறினர்.
இதற்கிடையே அங்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுக்க தொடங்கிய நிலையில் திடீரென்று போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கலைந்து செல்ல கூறிய போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பிரச்சனைக்கு தீர்வு கண்டால் மட்டுமே கலைந்து செல்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து நெரிசலுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications