''ப்பா.. என்னா வரவேற்பு.. தாமரை மலர்வது இப்பவே எனக்கு தெரியுது''.. புதுவையில் நெகிழ்ந்த ஜே.பி நட்டா!
புதுவை: புதுவை சட்டசபை தேர்தலில் 23-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தாமரை மலரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறினார்.
Recommended Video

முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும் ஜேபி நட்டா தெரிவித்தார்.
அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜேபி நட்டா பேசினார்.

வேட்டி, சட்டையில் கலக்கும் நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகம், புதுவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மதுரை பாண்டி கோவில் பகுதியில் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்ட ஜேபி நட்டா, சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் இணைந்து செயல்படும் என்று கூறினார்.

புதுவையில் 70% மானியம்
இதனை தொடர்ந்து இன்று ஜேபி நட்டா புதுச்சேரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். புதுவை விமான நிலையத்தில் ஜே.பி.நட்டாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் நட்டா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரியில் 35 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 52 சதவீத மக்கள் இன்னும் வறுமை கோட்டிற்கு கீழ் தான் வாழ்கின்றனர். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் புதுச்சேரிக்கு 70 சதவீதம் மானிய உதவி வழங்கப்பட்டது.

மக்களுக்கு துரோகம் செய்து விட்டார்
தற்போது முதல்வராக இருக்கும் நாராயணசாமி, மத்திய அமைச்சராக இருந்தபோது, இந்த மானிய உதவி 30 சதவீதமாக குறைக்கப்பட்டது.மேலும், நாராயணசாமி அமைச்சராக இருந்தபோது ஜார்க்கண்ட் மாநிலத்தின் ரூ.5 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். ஆனால், தற்போது புதுச்சேரி முதல்வராக இருக்கும் அவர், எந்தவித கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. புதுச்சேரி மக்களுக்கு அவர் துரோகம் இழைத்துவிட்டார்.

தாமரை மலரும்
அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உங்களின் (புதுச்சேரி மக்களின்) உற்சாக வரவேற்பை பார்க்கையில் வரும் சட்டசபை தேர்தலில் 23க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று புதுச்சேரியில் விரைவில் பா.ஜ., ஆட்சி மலரும் என்பது தெளிவாக தெரிகிறது. வளர்ச்சியும், ஊழலற்ற ஆட்சியையும் புதுச்சேரியில் பார்ப்பீர்கள். புதுச்சேரியில் தாமரை மலரும் என்று ஜேபி நட்டா பேசினார்.












Click it and Unblock the Notifications