கிரண்பேடி வழக்கு..உச்ச நீதிமன்ற உத்தரவால் ஒருபக்கம் வருத்தம்..இன்னொரு பக்கம் சந்தோஷத்தில் நாராயணசாமி
Recommended Video
புதுச்சேரி: முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநக்கான அதிகாரம் தொடர்பான வழக்கில் கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளதாகவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடந்த 3 ஆண்டு காலமாக மோதல் நீடித்து வருகிறது.
ஆளுநர் கிரண்பேடி தனது அதிகார வரம்பை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு வருகிறார் என முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார். இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சகம் புதுவையில் துணை நிலை ஆளுநருக்க கூடுதல் அதிகாரம் இருப்பதாக கூறியதோடு ஆளுநருக்கு உரிய அதிகாரத்தை வரையறுத்து ஒரு உத்தரவையும் வெளியிட்டது.

மத்திய அரசின் உத்தரவு ரத்து
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்தது.

மத்திய அரசு முறையீடு
இதை எதிர்த்து கிரண்பேடி தரப்பில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

தீர்ப்பை நிறுத்தவில்லை
இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், " புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பாக சென்னை உயர்தீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடைவிதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்தீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது என உச்சதீதிமன்றம் கூறியுள்ளது.

ஜனநாயகம் நிலைநிறுத்தம்
மேலும் முதல்வரை அந்த வழக்கில் பிரதிநிதியாக சேர்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளது. நிதி தொடர்பான முடிவுகளை அமல்படுத்த மட்டுமே அமைச்சரவைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications