முதலமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி.. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம்
புதுச்சேரி: மக்கள் நலனுக்காக ராஜ் நிவாஸ்-க்கு அதிகப்படியான பணிகளைக் கொடுத்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி என கூறியுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவியேற்று 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கிரண்பேடி, இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், மாநில நிர்வாகத்தை சிறப்புற முன்னெடுத்துச் சென்றதற்காக தலைமைச் செயலர் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையானவற்றை மத்திய அரசுக்கு தெரிவிப்பேன் என்றும் தேவையான திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றும் தனத் கடிதத்தில் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார். மக்கள் தன்மீது கொண்ட நம்பிக்கைக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே நேரம், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மீது மாணவர் கூட்டமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அரசு சார்ந்த கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஆளுநர் கிரண்பேடி அவசரமாக டெல்லி சென்றுள்ள நிலையில், அவர் வேறு மாநிலத்தில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. துணை நிலை ஆளுநாக உள்ள கிரண்பேடி, மாநில ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கம் அல்லது கேரளாவில் கிரண்பேடி கவர்னராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications