இனிமே கோட்டுல நின்றுதான் போகனும்.. சமூக இடைவெளிக்காக புதுச்சேரி போக்குவரத்து போலீசாரின் புது முயற்சி
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நிற்கும்போது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஒரு மீட்டர் இடைவெளி கோடுகள் வரையப்பட்டுள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 3 வது கட்டமாக வருகிற 17 ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளதால், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 4 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ஓட்டல்கள், கடைகள், எலக்ட்ரிக்கல், டூவீலர் மெக்கானிக், துணிக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ், கட்டிடம் மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்டு, சானிட்டரி வேர், செல்போன் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை வழக்கம்போல் செயல்பட தொடங்கின. இதனால் பொதுமக்கள் வழக்கம்போல் வீடுகளில் இருந்து வெளியே வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். சாலையில் வாகனங்களின் பெருக்கமும் அதிகமாக இருந்து வருகிறது.

இதனால் புதிய பேருந்து நிலையம், மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, காந்தி வீதி, காமராஜர் சாலை, நெல்லித்தோப்பு, உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வாகனங்கள் அணி வகுத்து செல்வதால் பல இடங்களில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.

இந்நிலையில் போக்குவரத்து சிக்னலில் பொதுமக்கள் நின்று செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக, போக்குவரத்து காவல்துறை சார்பில் முக்கிய சந்திப்புகள், சிக்னல்களில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு கோடுகள் வரையப்பட்டுள்ளது. தற்போது இந்த கோடுகளுக்குள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். போக்குவரத்து போலீசாரின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது.













Click it and Unblock the Notifications