அனாதையாக கிடந்த ஆயிரக்கணக்கான குவாட்டர் பாட்டில்கள்.. சுற்றிவளைத்த துணை ராணுவம்.. புதுவையில் பரபர!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியில் துணை ராணுவப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான மது பாட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் நியாயமான முறையில் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் புதுச்சேரி முழுவதும் 24 மணி நேரமும் போலீசாருடன் இணைந்து துணை ராணுவப்படை வீரர்களும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் உருளையன்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 6 பைகள் கேட்பாறறாறு கிடந்தன. இதனையடுத்து அதனை சோதனை செய்தபோது அதில் 60 ஆயிரம் மதிப்பிலான 500 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மதுபாட்டில்களை கொண்டு வந்த நபர் யார் என்பதையும், தேர்தலையொட்டி புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மது கடத்த முயற்சி செய்யப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் சந்தேகபடும்படியாக நபர்கள் சுற்றி கொண்டு இருப்பதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது, 168 மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அதை பறிமுதல் செய்த போலீசார், பாட்டில்களை மறைத்து வைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மட்டும் ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.