’வட சென்னை’ தனுஷ்னு நினைப்பு! கஞ்சா வைக்கும் இடமாயா அது? புதுச்சேரியில் விழுந்து சிரித்த போலீஸ்!
புதுச்சேரி : 'வட சென்னை' படத்தில் வருவது போல புதுச்சேரி நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு விசாரணை கைதி ஒருவர் 15 செ.மீ. நீளமுள்ள கஞ்சா பொட்டாலத்தை ஆசனவாயில் மறைத்து கடத்தி சென்ற முயற்சித்த போது போலீசில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். அதில் நீதிமன்றத்தில் இருந்து கஞ்சா கடத்தும் சிறை கைதிகள் அதனை ஆசனவாயில் எடுத்து வரும்போது சிக்குவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
அதைப் பார்த்து தாங்களும் அப்படி செய்யலாம் என நினைத்தார்களோ என்னவோ நீதிமன்றத்தில் இருந்து புதுச்சேரி சிறைக்கு கஞ்சா கடத்த முயன்ற நபர்கள் தான் தற்போது போலீசில் சிக்கி மேலும் ஒரு வழக்கில் மாட்டி இருக்கிறார்கள்

சிறை கைதிகள்
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 350-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இதில் விசாரணை கைதிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை நேரடியாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு மங்கலம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட முருகன் என்பவர் நீதிமன்றத்தில் 9-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.

கஞ்சா கடத்தல்
அவருடன் வில்லியனூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட தடி அய்யனாரும் சென்று உள்ளார். தடி அய்யனாரின் அறிவுறுத்தலின்படி முருகன் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி சென்றுள்ளார். அப்போது ஆசனவாய்க்குள் 15 சென்டிமீட்டர் அளவுக்கு பிளாஸ்டிக்கில் சுற்றிய 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை எடுத்து வைத்துக்கொண்டார். மீண்டும் இருவரும் சிறைச்சாலைக்கு வந்தபோது முருகனின் நடையில் மாற்றம் இருந்தது.

ஆசனவாயில் கஞ்சா
இதனை பார்த்த சிறை காவலர் ஷாஜகான் பரிசோதித்தபோது விசாரணை கைதி முருகன் கஞ்சா பொட்டலத்தை ஆசனவாயில் வைத்து இருப்பதை கண்டறிந்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறை ஊழியர்கள் பரிசோதனை செய்ததில் சுமார் 15 சென்டிமீட்டர் அளவுக்கு கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக காலாப்பட்டு காவல் நிலையத்தில் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கர் புகார் அளித்துள்ளார்.

சிறையில் கஞ்சா
தடை செய்யப்பட்ட கஞ்சாவை மிகவும் பாதுகாப்புக்குரிய நீதிமன்ற வளாகத்தின் கழிவறையில் வைத்தது, சிறைச்சாலைக்குள் கொண்டுவர முயற்சித்தது என முருகன் மற்றும் அவருக்கு உத்தரவிட்ட தடி ஐயனார் மீது காலாப்பட்டு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் புதுச்சேரி சிறையில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications