புதுச்சேரியில் மாசிமக தீர்த்தவாரி.. வியப்புடன் பார்த்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!
புதுச்சேரி: மாசிமகத்தையொட்டி புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் பங்கேற்றுள்ளனர். தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கடலில் புனித நீராடி உற்சவ மூர்த்திகளை வழிபட்டனர்.
மாசிமகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் வெகு விமர்சையாக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தீர்த்தவாரிக்காக வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் நேற்று முன்தினம் இரவு முதல் வரத்தொடங்கினர். வைத்திக்குப்பம் கடற்கரையில் இன்று காலை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மாசிமகத்தையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தீர்த்தவாரியில் மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்கநாதர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனிவாச பெருமாள், புதுவை மணக்குள விநாயகர், ராமகிருஷ்ணாநகர் ஹயக்ரீவர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்தும் 100 க்கும் உற்சவ மூர்த்திகள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் தீர்த்தவாரி நடக்கும் வைத்திக்குப்பம் கடற்கரை மற்றும் சாமிகள் வரும் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஆளில்லா விமானம் மற்றும் 30 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாசிமகத்தையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாசிமக தீர்த்தவாரியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கூடிநின்று வியப்புடன் பார்த்தனர்.














Click it and Unblock the Notifications