எப்படி போய்ட்டிருக்கு.. 2 மணி நேரத்திற்கு ஒருமுறை போன் போட்டு கேட்கும் கிரண் பேடி
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் குறித்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி போன் போட்டுக் கேட்டு வருகிறாராம்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி ஆளுநர் மாளிகை முன்பு முதலமைச்சர் நாராயணசாமி தனது அமைச்சரவை சகாக்களுடன் 3 வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
மூன்றாவது நாளாக நடைபெறும் தர்ணா போராட்டத்தால் ஆளுநர் மாளிகை முழுவதும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டும், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருவதால், தர்ணா போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை புரிபவர்களுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன் முதலமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் கட்சி நிர்வாகிகள் தர்ணா போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தபோது அவர்களை துணை ராணுவத்தினர் உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அமைச்சர்கள் ராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா நடைபெற்ற இடத்திலிருந்து எழுந்துவந்து போலீசாருடம் அமைச்சர்களுடன் சமாதானம் பேசினர். இதனையடுத்து குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களை தர்ணா போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆளுநர் மாளிகை அருகில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் புதுச்சேரியில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, சட்ட ஒழுங்கு குறித்து காவல் துறை இயக்குனரிடம் கிரண்பேடி தொலைபேசியில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தொடர்பு கொண்டு அறிக்கையை கேட்டறிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.