'ஷாக்..' ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்.. மகன் உயிரிழந்த செய்தி கேட்டு தாயும் பலி
புதுச்சேரி: மகன் ஆற்றில் மூழ்கி இறந்த செய்தியைக் கேட்டு தாயும் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் வேலு- முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 27 வயதில் ஜீவா என்ற மகன் உள்ளார்.

ஜீவா நேற்று மாலை தனது நண்பர்களுடன் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஆற்றில் மீன் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ஜீவாவின் நண்பர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஜீவா மட்டும் தனியாக ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
அந்த இடம் சுற்றுலா மையத்துக்காக ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதை அறியாத ஜீவா ஆழமான பகுதிக்குச் சென்றதால் ஆற்றில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக தவளகுப்பம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் ஜீவாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஜீவாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதய நோய் உள்ள ஜீவாவின் தாயார் முத்துலட்சுமி (50) மகன் ஆற்றில் மூழ்கிய செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரது உறவினர்கள் அவரை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் இன்று காலை ஜீவாவின் உடல் அரியாங்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜீவாவின் தாயார் முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications