பீச்சில் வாக்கிங் போன அமைச்சர்.. வழிமறித்த கொள்ளையர்கள்.. புதுச்சேரியில் பரபரப்பு !
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் நடைப்பயிற்சி சென்ற கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணனை மர்ம நபர்கள் வழிமறித்து அவரது செல்போனை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் கமலகண்ணன். இவரது இல்லம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ளது. அமைச்சர் கமலகண்ணன் தினந்தோறும் அதிகாலை நேரத்தில் கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று அவர், வழக்கம்போல் நடைபயிற்சியை முடித்துகொண்டு, வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது இருள் சூழ்ந்த இடத்தில் 2 மர்ம நபர்கள், அமைச்சர் கமலகண்ணனை வழிமறித்து, அவருடைய கையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.
.இச்சம்பவம் குறித்து கமலக்கண்ணனின் பாதுகாப்பு அதிகாரி ரத்தினவேலு கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். புதுச்சேரியில் அமைச்சரிடமே செல்போன் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. ரவுடிகள் ஒருவருக்கொருவர் வெடிகுண்டு வீசி கொலை செய்வதும், ரவுடிகள் சிறையில் இருந்தவாறே தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கஞ்சா விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் பியூட்டி பார்லர் என்ற பெயரில் ஆன்லைன் மூலம் விபச்சாரமும் கொடிகட்டிப் பறப்பதாகவும் கூறப்படுகிறது. புதுச்சேரியில் போலீசார் ரவுடிகளை ஒடுக்கி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.