பணத்திற்கு பதிலாக இலவச அரிசி வழங்க கோரும் நிலையில் மாற்றம் இல்லை- புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக குடியரசுத் தலைவரின் முடிவு இறுதியானது அல்ல. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கண்டிப்பாக மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்களுக்கு பணத்திற்கு பதிலாக இலவச அரிசி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத்தொடர்ந்து தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடன் கருத்து தெரிவித்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாதம்தோறும் இலவச அரிசி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தோம். இலவச அரிசிக்கு பதிலாக, பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
இலவச அரிசிக்கு பதிலாக, பணம் வழங்க வேண்டும் என்ற இருவேறு கருத்து ஏற்பட்டதால், இவ்விகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்க துணைநிலை ஆளுநர் கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பினார். இதனிடையே புதுச்சேரியில் தொடர்ந்து ஒற்றை அவியல் இலவச அரிசி வழங்க வேண்டுமென மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை சந்தித்து நானும், அமைச்சர்களும் வலியுறுத்தினோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
ஆனால் குடியரசு தலைவர் இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். குடியரசு தலைவரின் உத்தரவை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்தோம்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வந்துள்ளது. அதில், இலவச அரிசிக்கும் பதில் பணமாக வழங்க வேண்டும் என்ற குடியரசு தலைவரின் உத்தரவு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள், எங்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் மாநில அரசின் கொள்கை பணத்திற்கு பதில் இலவச அரிசி வழங்க வேண்டும் என்பது தான். முழுமையான தீர்ப்பு வந்த பின்னர் அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அருணாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசை குடியரசு தலைவர் டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்ட பின்னர், நீதிமன்றம் குடியரசுத் தலைவர் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளது. குடியரசு தலைவரின் தீர்ப்பு இறுதியானது அல்ல என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.