புதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டு.. விண்ணைப் பிளந்த ஹேப்பி நியூ இயர் கோஷம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஹோட்டல்களில் மது விருந்துடன் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். மேலும் கடற்கரையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு புதிய வருடம் பிறந்ததும், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பறிமாரிக்கொண்டனர்.

2019 ஆம் ஆண்டு முடிந்து 2020 ஆம் ஆண்டு பிறந்துள்ளதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. புத்தாண்டு பிறப்பு புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற்ற மதுவுடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகளில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரை சாலையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரகணக்கானோர் குவிந்தனர்.
நள்ளிரவு 12 மணிக்கு புதிய வருடம் பிறந்ததும், புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், ஹேப்பி நியூ இயர் என வின்னை பிளக்கும் அளவிற்கு கோஷங்களை எழுப்பியும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

கடற்கரையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் தனித்தனியாக பார்வையிட்டு பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதேபோல் புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமலிருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதனிடையே இந்தாண்டு, பொது இடங்களில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரசு அனுமதி அளிக்காததால், சுற்றுலாப் பயணிகள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications