புதுச்சேரி ஷாக்! திருமணமாகி ஒரே மாசம்.. மாப்பிள்ளை வீட்டில் வந்த போன் கால்.. கதறும் உறவினர்கள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் திருமணமாகி ஒரே மாதத்தில் கணவர் வீட்டில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.. வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை தனது மகளை அடித்து சித்திரவதை செய்து வந்தார் என்றும். தற்போது கொலை செய்துவிட்டதாகவும் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் கூறி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி புதுசாரம் லட்சுமி நகரை சேர்ந்த கேஸ் டிஸ்ட்ரிபுட்டர் ஏழுமலை. விழுப்புரம் மாவட்டம் தனசிங்குபாளையத்தை சேர்ந்த சிவபாக்கியம் என்ற பெண்ணை கடந்த மாதம் பிப்ரவரி 01-ம் தேதி திருமணம் செய்தார்.
திருமணம் முடிந்து சிவபாக்கியம் தனது கணவர் ஏழுமலையுடன் புதுச்சேரியில். வசித்து வந்துள்ளார். அடிக்கடி கணவர் ஏழுமலை நகைகள் கேட்டும், வீட்டு சொத்து பத்திரம் கேட்டும் மனைவியை துன்புறுத்தியதாக கூறப்பபடுகிறது.
மனஉளைச்சல்
இதனால் மனஉளைச்சல் அடைந்த பெண் வீட்டார் மகளுக்கு தாலி பிரித்து போடும் போது நகை மற்றும் சொத்துபத்திரம் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து ஏழுமலை தினந்தோறும் மது அருந்துவிட்டு வந்து தனது மனைவி சிவபாக்கியத்தை தாக்கியதாக தெரிகிறது
சிவபாக்கியம் மரணம்
திருமணம் ஆகி ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் நேற்றும் கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு சிவபாக்கியம் இறந்துவிட்டதாக அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக பதறியடுத்துக்கொண்டு புதுச்சேரி வந்த சிவபாக்கியத்தின் குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
புகார்
தனது மகளை மாப்பிள்ளை கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். திருமணமாகி ஒரு மாதமே ஆகியுள்ளது., திருமணம் ஆன நாள் முதல் வரதட்சணை கேட்டு தனது மகளை துன்புறுத்தி வந்தார். உச்சகட்டமாக கொலை செய்து உள்ளார்.எனவே அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்று சிவபாக்கியத்தின் உறவினர்கள் கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆர்டிஓ விசாரணை
மேலும் கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தை 20-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசை ஆசையாக வளர்த்த மகளை வரதட்சணை கேட்டு கொலை செய்தவர்களை கைது செய்ய கோரியும், மகளை நினைத்து தாய் மற்றும், குடும்பத்தினர் காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.