புதுச்சேரி சபாநாயகருக்கு திடீர் சிக்கல்... நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சிகள்!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் சிவக்கொழுந்துக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன.
புதுச்சேரி மாநில சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி மக்களை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனையடுத்து புதுச்சேரி மாநில சபாநாயகராக லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகராகவும் இருந்தவந்து சிவகொழுந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிவகொழுந்து சபாநாயகராக பதவியேற்றதிலிருந்து, அவர் தலைமையில் ஒருமுறை மட்டுமே பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சிகள் கடிதம் அளித்துள்ளனர். சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் அவரது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயரிடம், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதத்தை அளித்துள்ளனர்.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான காரணம் குறித்து எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி கூறுகையில், தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் சபாநாயகர் சிவக்கொழுந்து பங்கேற்பதாகவும், அவர் சபையை நடுநிலையாக நடத்த மாட்டார் என்றும், அதனால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதாக தெரிவித்தார்.
இதனிடையே புதுச்சேரியில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து ரங்கசாமி ரகசியம் கூட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளார்.
கர்நாடகத்தை போன்றே புதுச்சேரியிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பாஜக தலைமை ரங்கசாமி மூலம் காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தொடர்ந்து நடத்துவதற்கான சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை போதுமானதாக உள்ளது. அதனால் பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு திட்டம் புதுச்சேரி மாநிலத்தில் பலிக்காது என ஆளும் காங்கிரஸ் தரப்பினரின் கருத்தாக உள்ளது.
இதற்கிடையில் 2019 - 2020 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை இன்னும் ஓரிரு நாட்களில் கூடவுள்ளது. இந்த நேரத்தில் எதிர்கட்சிகள் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications