ரூ 30000 கோடியில் சூப்பர் திட்டம்! இனி புதுவை - சென்னை செல்ல 2 மணி நேரம்தான்! பிரதமர் மோடி உறுதி
புதுவை: புதுவையிலிருந்து சென்னை 2 மணி நேரத்தில் செல்லும் அளவுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் பொங்க தெரிவித்தார். மேலும் சென்னையிலிருந்து புதுவை, காரைக்கால் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தார். இதையடுத்து இன்று காலை 10.20 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவைக்கு மோடி புறப்பட்டார்.

அங்கு லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதான திடலில் நடந்த அரசு நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். மேலும் ஸ்ரீஅரவிந்தரின் 150 ஆவது பிறந்த ஆண்டை நினைவு கூறும் வகையில் புதுவை ஆரோவில்லில் நடந்த மகோத்சவத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் அரசு விழாவில் மோடி பேசுகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் புதுவை பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இரட்டை என்ஜின் ஆட்சியே புதுவையில் இந்த வளர்ச்சிக்கு காரணம்.
புதுவை ஒரு வசந்த பூமி. வார இறுதியில் புதுவை வருவதை சுற்றியுள்ள மாநில மக்கள் விரும்புகிறார்கள். புதுவையில் உள்ள இரட்டை என்ஜின் அரசு சுற்றுலாவை மேம்படுத்தியுள்ளது. ஆன்மீக சுற்றுலா, இயற்கை சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது ரேஷன் கடைகளில் அரிசி கூட இல்லாமல் இருந்தது. காங்கிரஸ் - திமுக ஆகியவை புதுவை மாநில வளர்ச்சிக்கு வேகத்தடைகள் போல் இருந்தன. இரு கட்சிகளும் தொடர்ந்து ஊழலில் திளைத்துள்ளனர்.
காங்கிரஸ், திமுக ஆட்சியில் மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகினர். குற்றங்கள் அதிகரிப்பு, அரசியல் நிலையற்றதன்மை போன்ற நிலைதான் இருந்தது. புதுவையை மருத்துவ சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லியில் உள்ள ஒரு குடும்பத்தின் ஏடிஎம்மாக புதுவையை காங்கிரஸ் மாற்றியிருந்தது. தற்போது மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸ் - திமுக துடிக்கின்றன.
புதுவை, காரைக்காலில் போக்குவரத்தை சீர்படுத்த திறன்மிகு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரூ 440 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரைச் சாலை, ஜிஎஸ்டி சாலைகளை மேம்படுத்த ரூ 30 ஆயிரம் கோடி செயலவு செய்யவுள்ளோம்.
இந்த பணிகள் நிறைவடைந்தால், இனிமே புதுவை - சென்னை இடையிலான பயண நேரம் 2 மணி நேரமாக இருக்கும். புதுவை சுற்றுலாத்துறை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லப்படும்.
திமுகவை பொறுத்தவரை தமிழகத்தில் தொடர் ஊழல், மோசடி என பட்டியல் நீள்கிறது. புதுவை ஒரு டபுள் என்ஜின் சர்கார். இந்த பணியில் உங்களுடன் இணைந்து பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவோம் என கூறினார் பிரதமர் மோடி. இந்த பணிகளை முடித்துக் கொண்டு மாலை 4.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை மண்டேலா நகரில் நடக்கும் பொதுக் கூட்டத்திற்கு செல்கிறார். இதனால் சென்னை, புதுவை இடையே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம், முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications