வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை.. கணவன் மனைவி கைது.. நாராயணசாமி வார்னிங்!
புதுச்சேரி: வீடு வாடகைக்கு எடுத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துவந்த தம்பதியினர் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் நாற்பதாயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி சுமதி. இருவரும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் புதுச்சேரி முதலியார்பேட்டை சுந்தரராசு வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடிவந்துள்ளனர். இந்த வீட்டிற்கு தினமும் அதிக அளவில் இளைஞர்களும், குடிமகன்களும் வந்துசென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் அந்த வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 6 பாக்கெட் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் திருவண்ணாமலை விரைந்தது. அங்கு உமாமகேஷ் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 பாக்கெட் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உமாமகேஷ் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூபாய் 40 ஆயிரம் ஆகும்.

புதுச்சேரியில் குட்கா, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இதனை காவல்துறையினர் கண்டுகொள்வதே இல்லை. இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் குட்கா, கஞ்சா, சிகரெட் போன்றவற்றை கடைகளில் விற்பனை செய்ய கூடாது என்றும், மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் எச்சரிக்கையையடுத்து புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல்நிலைய போலீசாரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி புதுச்சேரியில் உள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தப்பட்டது. அதில் சிகரெட், குட்கா, விற்பனை செய்த19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல ஆயிரம் மதிப்பிலான சிகரெட் குட்கா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications