48 நாளா கடைய மூடுனா எப்படி.. அதான் வீட்டிலேயே சாராயம் காய்ச்ச ஆரம்பிச்சிட்டோம்.. புதுவையில் பரபர
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஊரடங்கு உத்தரவால் மதுபானம் மற்றும் சாராயக்கடைகள் திறக்காத விரக்தியில் வீட்டுத் தோட்டத்தில் கள்ளச்சாராயம் தயாரித்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 4 வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. ஊரடங்கால் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள், சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிகாரர்கள் மது குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மதுபோதைக்கு அடிமையான சிலர் வயல்வெளி, காட்டுப்பகுதி, வீடுகளில் சாராயம், மதுபானம் தயாரித்து குடிக்கின்றனர். இதனை போலீசார் கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் ஊரடங்கிற்கு நடுவே தமிழகத்தில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதால், முதல்முறையாக புதுச்சேரியை சேர்ந்த குடிகாரர்கள் தமிழகத்திற்கு சென்று தங்களது உறவினர்கள் மூலம் மதுவை வாங்கி வந்து குடித்தனர்.

சிலர் தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு மது கடத்தியதற்காக கைதும் செய்யப்பட்டனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலுள்ள பூவம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கோட்டுச்சேரி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கோட்டுச்சேரி காவல்நிலைய ஆய்வாளர் லெனின் பாரதி தலைமையிலான காவலர்கள், பூவம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அதே தெருவை சேர்ந்த முருகன் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் தங்களது வீட்டு தோட்டத்தில் கள்ளச் சாராயம் தயாரித்தது தெரியவந்தது.
பின்னர் கள்ளச்சாராயம் காய்ச்சிய முருகன் மற்றும் செல்வம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, கள்ளச் சாராயம் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களை கைப்பற்றி கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications