முதல்முறையாக காரைக்காலில் சிறைக் கைதிக்கு கொரோனா.. அச்சத்தில் சிறைத் துறை போலீஸார்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் ஏற்கனவே 8 பேர் குணமடைந்த நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 8 மட்டுமே மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசின் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியை தவிர, புதுச்சேரி மாநிலத்தின் இதர பிராந்தியங்கான காரைக்கால், மாஹே, ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லாமல் அப்பகுதிகள் இருந்தன. இந்நிலையில் முதல் முறையாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் முதல் முறையாக 47 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
காரைக்கால், சுரக்குடி பகுதியைச் சேர்ந்த அவர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு கைதானவர். அவர் சிறைக்கு செல்லும் முன்பு பரிசோதனைக்கு போலீஸார் அழைத்து சென்றனர். அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவருடன் தொடர்பில் இருந்தோருக்கும் பரிசோதனை நடக்க உள்ளது என்று தெரிவித்தார். இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.