ஆளுநர் தமிழிசை முன் மண்டியிட்டு கெஞ்சிய கைதிகள்.. “ஒரு வாய்ப்பு கொடுங்கம்மா”.. சிறையில் நெகிழ்ச்சி!
புதுச்சேரி : காலாபட்டு சிறையில் கைதிகளின் செயலால் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நெகிழ்ச்சியடைந்தார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைக்குச் சென்றபோது, அங்கிருந்த கைதிகள், அவர் காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் அவரை நெகிழச் செய்தது.
சர்தார் வல்லபாய் பட்டேலின் 147 ஆவது பிறந்த தினத்தையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு சென்றார்.
சிறைச்சாலையில் கைதிகளால் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தைப் பார்வையிட்ட பிறகு தமிழிசை அங்கிருந்து கிளம்ப முற்பட்டபோது 20க்கும் மேற்பட்ட கைதிகள், தமிழிசை காலில் விழுந்து தங்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என சுமார் 250 பேர் உள்ளனர். அவர்கள் சிறை வளாகத்தில் இயற்கை முறையில் தோட்டத்தை உருவாக்கி உணவு தானியங்கள், பழங்களை சாகுபடி செய்து வருகின்றனர். சர்தார் வல்லபாய் படேல் நினைவாக மரம், செடி, கொடிகளுடன் இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று திறந்து வைத்தார்.

சுற்றிக் காட்டிய கைதிகள்
சிறை வளாகத்தில் தாங்கள் அமைத்து, பராமரித்து வரும் தோட்டத்தை, கைதிகளே ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சுற்றிக்காட்டி, என்னென்ன சாகுபடி செய்யப்படுகிறது என்பதை விளக்கினர். தோட்டத்தை சிறப்பான முறையில் ஏற்படுத்தி, காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்து வரும் கைதிகளை ஆளுநர் தமிழிசை பாராட்டினார்.

காலில் விழுந்து கதறல்
பின்னர், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கிருந்து கிளம்ப முற்பட்டபோது, அவரது காலில் விழுந்து கைதிகள் கதறினார்கள். ஆயுள் தண்டனை கைதிகளான 27 பேர் தண்டனைக்காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் சிறையில் இருப்பதாகவும், தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு வழங்கும்படியும் கூறி கண்ணீர் மல்க கெஞ்சினர்.

ஒரு வாய்ப்பு கொடுங்க
"சமுதாயத்தில் நல்லபடியாக வாழ எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க.. நல்லபடியாக எங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்வோம். கடைசி வாய்ப்பு உங்க கையில தான் இருக்கு.." என கைதிகள் தமிழிசையிடம் கைகூப்பி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், கைதிகளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நியாயமான கோரிக்கை
இதுபற்றி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுதந்திர போராட்ட காலத்தில் சிறைச்சாலைகளில் வதைபட்டு கிடந்தார்கள். இன்று விதை போட்டு தோட்டம் வளர்க்கிறார்கள். அதனை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு தோட்டம் முதலில் சிறியதாக இருந்தது. இப்போது விரிவடைந்துகொண்டே போகிறது. பசுமையான சூழலில் இருக்கும்போது கைதிகளின் மனநிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. இது உளவியல் ரீதியாக மனநலம் சார்ந்தது. அவர்கள் நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளனர். நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications