டெல்லி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு, புதுச்சேரியில் எதிர்ப்பு.. மாணவர் கூட்டமைப்பு நூதன போராட்டம்
Recommended Video
புதுச்சேரி: டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி புதுச்சேரியில் மாணவர் கூட்டமைப்பினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், கடந்து சில தினங்களுக்கு முன்பு கோபால் என்பவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்தார். இதேபோல் நேற்றைய தினம் ஜாமியா பல்கலைக்கழகத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் உள்ள ஷாஹின் பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் மீது உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.



இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், புதுச்சேரியில் மாணவர் கூட்டமைப்பு சார்பில் முத்தியால்பேட்டை பகுதியில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் போன்று இருவருக்கு வேடமிட்டு, அவர்களின் கைகளில் சங்கிலியை கட்டி, சாலையில் தரதரவென இழுத்து வந்து, முட்டிப்போட வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications