பாம்பு மேட்டரை சூப்பராக டீல் செய்த ஆஹா முதல்வர்.. அடடா நாராயணசாமி!
வீடு ஒன்றில் பாம்பு நுழைந்ததால் முதல்வர் உதவி செய்து காப்பாற்றினார்.
புதுச்சேரி: ஒரு சாதாரண பாம்பு மேட்டரை வனத்துறையினர் சரியாக டீல் செய்யாததால் முதல்வரே தலையிடும் நிலைமை ஏற்பட்டது.
அரியாங்குப்பம் அருகே உள்ள மணவெளியை சேர்ந்த தம்பதி ராஜா - விஜயா. 19 வயதில் மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். நேற்று இரவு ராஜா வீட்டில் இல்லை. விஜயா தன் பிள்ளைகளுடன் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது, நடுராத்திரி 1 மணி இருக்கும். தடால்புடால் என பாத்திரங்கள் உருண்ட சத்தம் கேட்டதும் விஜயா அலறி அடித்து எழுந்தார்.
கருப்பு கலர்
லைட்டை போட்டு பார்த்தால் அங்கே 5 அடி நீளத்துக்கு ஒரு பாம்பு ஒதுங்கி இருந்தது. கருப்பு கலராக இருந்த பாம்பை பார்த்ததும், விஜயா உட்பட பிள்ளைகளும் பயந்தனர். அது கருநாகப்பாம்பு. கடித்தால் அவ்வளவுதான்... கடுமையான விஷம் நிறைந்தது!!
அவசர போலீஸ்
நடுராத்திரிக்கு யாரையுமே கூப்பிட முடியவில்லை. அதனால் அவசர போலீஸ் 100-க்கு போன் செய்தார். அவர்களும் வனத்துறை ஆபீஸ் போன் நம்பர் தந்து அங்கே உடனே பேச சொன்னார்கள். அந்த நம்பருக்கு போனை போட்டால் யாருமே எடுக்கவில்லை.
டைரியை புரட்டினார்
கண் முன்னால் 5 அடி நீள பாம்பு நெளிய பீதியுடன் நம்பரை விஜயா போட்டு கொண்டே இருந்தார். கடைசிவரை எடுக்கவே இல்லை. அந்த நேரத்தில் மகன் வசந்துக்கு ஒரு ஐடியா வந்தது. வீட்டில் இருந்த அரசு தொலைபேசி எண்கள் கொண்ட டைரியை புரட்டினார். அதில் முதல் நம்பரே முதலமைச்சர் நாராயணசாமி போன் நம்பர் இருந்தது.
பயமா இருக்கு சார்
உடனே முதல்வருக்கு போன் செய்தார் வசந்த். தூங்கி கொண்டிருந்த நாராயணசாமிதான் போனை எடுத்து பேசினார். "எங்கள் வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டது, போலீஸை கூப்பிட்டோம், வனத்துறையை கூப்பிட்டோம், யாருமே உதவிக்கு வரல. எங்களுக்கு பயமா இருக்கு" என்றார்.
2 பேர் விரைவு
உடனே நாராயணசாமி "சரி... யாரும் பயப்படாதீங்க... பாம்பை பிடிக்க உடனே ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லி அதிகாரிகளுக்கு போன் செய்தார். உடனடியாக ஆட்கள் 2 பேர் விஜயா வீட்டிற்கு வந்தனர். அங்கு பதுங்கி இருந்த பாம்பை பிடித்து கொண்டு போனார்கள். அதன்பிறகுதான் விஜயா குடும்பத்துக்கு நிம்மதியானது.
விசாரித்தார்
ஆனால் இதில் ஹைலைட் என்னவென்றால், இன்னைக்கு காலையில் முதலமைச்சர் நாராயணசாமி, நைட் வந்த நம்பருக்கு போன் செய்து விசாரித்திருக்கிறார். அப்போது அவர்கள், தங்கள் பகுதியில் நிறைய பாம்பு உள்ளது, அதனை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, உதவி புரிந்து உயிரை காப்பாற்றியதற்காக நன்றியும் சொன்னார்கள்.
எம்எல்ஏ நேரில் ஆய்வு
இதற்கு பிறகும் நாராயணசாமி இந்த பாம்பு மேட்டரை விடவில்லை. விஜயா சொன்ன அந்த இடத்துக்கு தொகுதி எம்எல்ஏவை அனுப்பி பாம்பு நடமாட்டம் குறித்து சொல்லி அனுப்பி வைத்தார். எம்எல்ஏவும் புதர்கள் நிறைந்த அந்த பகுதிகளை பார்வையிட்டு, மண்டிகளை அகற்றி, பாம்புகள் நடமாட்டம் இல்லாதவாறு செய்வதாக குடியிருப்புவாசிகளுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.