144 தடை உத்தரவு ஏன்... குடும்பத்துடன் சென்று ஓட்டு போடலாமா? புதுவை ஆட்சியர் முக்கிய விளக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்பத்தினருடன் நண்பர்களுடனும் சேர்ந்து சென்று வாக்களிக்கத் தடையில்லை என்றும் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் என்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்துடன் புதுவையிலும் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது, இதனால் புதுவையில் வரும் 7ஆம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாகப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், இந்த 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவின் ட்விட்டர் பதவிகளைப் பலமுறை மாவட்ட ஆட்சியர் ரீட்வீட் செய்துள்ளதாகவும், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படக்கூடியவராக இருப்பதால் இந்த உத்தரவு அரசியல் உள்நோக்கத்துடன் அவர் பிறப்பித்து இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

நீதிபதிகள் அதிருப்தி
இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 144 தடை உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தவில்லை என்றால் நீதிமன்றமே அதை ரத்து செய்யும் என நீதிபதிகள் எச்சரித்தனர்

ஆட்சியர் விளக்கம்
இந்நிலையில், இந்த தடை உத்தரவு குறித்து தற்போது மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். வாக்குப்பதிவின் போது சட்டவிரோதமாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நபர்கள் கூடுவதைத் தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் குடும்பத்தினருடன் நண்பர்களுடனும் சேர்ந்து சென்றும் வாக்களிக்க தடையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயல்பு வாழ்க்கையை பாதிக்காது
தற்போது புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். 144 தடை உத்தரவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காது என்றும் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புதுவையில் உள்ள 30 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications