பப்ஸ் சாப்பிட்டது குத்தமா.. அசிங்கமாக திட்டிய பேராசிரியர்.. தற்கொலைக்கு முயன்ற மாணவி!
புதுச்சேரி: புதுச்சேரி அருகே பேராசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மாணவி ஒருவர் கல்லூரியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ப்ரித்திகா. இவர் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் பெரம்பை கிராமத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

வழக்கம்போல் இன்று கல்லூரிக்கு சென்ற ப்ரித்திகா, இடைவேளை நேரத்தில் தன்னுடன் பயிலும் சக ஆண் நண்பர்களுடன் பப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு, அவர்களுடன் விளையாடியுள்ளார். இதனைபார்த்த பேராசிரியர் பிரதாபன் மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ப்ரித்திகா கல்லூரியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் கல்லூரி வளாகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உடனே பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை ஆசிரியர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்பும் கூட ஒருமுறை இதேபோன்று பேராசிரியர் பிரதாபன் மாணவி ப்ரித்திகாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே மாணவியின் தற்கொலை முயற்சிக்கு காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசிரியர் திட்டியதால் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications