2ம் திருமணத்திற்கு பதிவு செய்த புதுவை டாக்டர்.. சிரித்து பேசியே ரூ 34 லட்சம் மோசடி செய்த பெண்!
புதுச்சேரி: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி புதுவை மருத்துவரிடம் இருந்து ரூ 35 லட்சத்தை அமெரிக்காவை சேர்ந்த பெண் என கூறிய ஒருவர் மோசடி செய்துள்ளார். இந்த வழக்கை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இவருக்கு 36 வயதே ஆவதால் வீட்டில் உறவினர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு பாலாஜிக்கு அறிவுறுத்தியினர். அதன்பேரில் பாலாஜியும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள மேட்ரிமோனியில் தகவல்களை கொடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து பாலாஜி மருத்துவர் என்பதால் அவரது செல்போனுக்கு நிறைய வரன்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். அவர்களிடம் இருந்து குறுந்தகவலும் மேட்ரிமோனி சாட் பகுதியில் பாலாஜிக்கு வந்தது. அந்த வகையில் பாலாஜிக்கு சோமஸ்ரீ நாயக் என்ற ஒருவர் அறிமுகமானார். அவர்தான் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்துவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண் தான் சிரியாவில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பொதுவாக பெரும்பாலானோர் தாங்கள் என்ன தொழில் செய்கிறோமோ அந்த தொழிலில் பணியாற்றும் ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள விரும்புவோம். உதாரணமாக டாக்டர் மாப்பிள்ளை, டாக்டர் பெண்ணை திருமணம் செய்வது, நடிகர் நடிகையை திருமணம் செய்வது, நடிகை டைரக்டரை திருமணம் செய்வது என பட்டியல் நீளும்.
இதுபோல் தங்கள் தொழிலுக்குள் திருமணம் செய்து கொள்வதால் பல நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். ஒருவரது வேலை எப்படி இருக்கு என்பதை இன்னொருவர் புரிந்து கொள்வர். இதனால் வீட்டுக்கு தாமதமாக வந்தாலும் அதனால் ஒரு பிரச்சினையும் திருமண வாழ்க்கையில் எழாது. இந்த லாஜிக் நிறைய இடங்களில் வொர்க் அவுட் ஆவதால் பாலாஜிக்கு, சோமஸ்ரீயை மிகவும் பிடித்துவிட்டது.
இதையடுத்து முதலில் நட்பாக பேசி பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் நண்பர்களாக மட்டுமே தொடர்வோம் என வாய்மொழியாக இருவரும் பேசி வைத்துக் கொண்டு பழகினர். அதில் பாலாஜிக்கு அந்த பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது. முதல் திருமணத்தில் தனக்கு கிடைத்த மனக்காயங்களுக்கு சோமஸ்ரீ மருந்தாக இருப்பார் என பாலாஜி மிகவும் நம்பினார்.
இந்த நிலையில் சோமஸ்ரீ தனக்கு திடீரென பணத்தேவைகள் இருப்பதாக கூறி பாலாஜியிடம் பல்வேறு தவணைகளாக ரூ 35 லட்சத்தை கேட்டு வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை சிறுக சிறுக வாங்கி இத்தனை பெரிய தொகையாக மாறியவுடன் பாலாஜியுடன் சோமஸ்ரீ நன்றாக பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளார்.
பாலாஜியே போன் செய்தாலும் பட்டும் படாமல் பேசிவிட்டு வேலை இருப்பதாகவும் அவசர கேஸ் வந்துவிட்டதாகவும் கூறி இணைப்பை துண்டித்துவிடுவார். இது போல் ஒரு முறை இரு முறை என்றால் பரவாயில்லை, ஒவ்வொரு முறையும் இப்படி சோமஸ்ரீ செய்தது பாலாஜிக்கு சந்தேகத்தை வரவழைத்தது. இதனால் அவரிடம் மருத்துவ பதிவு எண்ணை பாலாஜி கேட்டிருந்தார்.
ஆனால் அதற்கு சோமஸ்ரீ எந்த பதிலையும் சொல்லவில்லை. அந்த கேள்விக்கு பிறகு சோமஸ்ரீ, பாலாஜியுடன் கொஞ்ச நஞ்சம் பேசியதையும் நிறுத்திவிட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த பாலாஜி, சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications