பிங்க் நிற கவுனில்.. டெட்டி பியர் பொம்மைகள்.. ஸ்கூல் பேக்குடன் புதுவை சிறுமியின் உடல் நல்லடக்கம்
புதுவை: புதுவையில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அவருடைய உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய உடலுக்கு பிங்க் நிற கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது. உடலுடன் அவர் பயன்படுத்திய பொம்மைகள், பாடப்புத்தகங்கள், விளையாட்டு சாமான்களும் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிறுமியின் உடல் வைத்திக்குப்பத்தில் உள்ள பாப்பம்மாள் கோயில் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நல்லடக்க நிகழ்வில் ஏராளமான மக்கள் கண்ணீர் சிந்தியபடி சிறுமிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பால் பற்கள் கூட விழுந்திருக்காத சின்னஞ்சிறு குழந்தையை இரு மிருகங்கள் வேட்டையாடி கொன்று கால்வாயில் போட்டுவிட்டன. ஒரு பக்கம் குழந்தையை பெற்றோர் தேடி பார்த்துவிட்டு போலீஸில் புகார் அளித்திருந்தனர்.
ஆனால் போலீஸார் சிறுமியை ஆள்கடத்தல் என்ற நோக்கத்தின் கீழே தேடி வந்தனர். பெண் குழந்தை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகியிருக்கக் கூடும் என்ற கோணத்தில் அவர்கள் தேடவில்லை என்பதுதான் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அது போல் குழந்தை 2 ஆம் தேதியே கொல்லப்பட்டுவிட்ட நிலையில் அதன் உடலை 5 ஆம் தேதிதான் போலீஸார் கண்டுபிடித்தனர். இதுவும் போலீஸாரின் அலட்சியத்தை காட்டுவதாக தெரிவித்தனர்.
இறுதி ஊர்வலம்: இந்த நிலையில் சிறுமியின் இறுதி ஊர்வலமானது அவருடைய வீட்டிலிருந்து வைத்திக்குப்பத்தில் உள்ள பாப்பம்மாள் கோயில் இடுகாட்டிற்கு வந்தடைந்தது. வழிநெடுகிலும் கண்ணீர் மல்க மக்கள் பூக்களை தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சிறுமியின் உடல் வைத்திக்குப்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
குழி: அங்கு தயாராக இருந்த குழிக்குள் சிறுமியின் உடல் வைக்கப்பட்டது. சிறுமிக்கு பிங்க் நிறத்தினாலான கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது. அந்த உடலுடன் டெட்டி பியர் பொம்மைகள், டம் டம் டமாரம், டீச்சர் விளையாட்டு விளையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஹேண்ட் பேக், ஸ்கூல் பேக், இன்னொரு பிங்க் நிற கவுன் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தது.
பிங்க் நிறம்: சிறுமிக்கு பிங்க் நிறம் என்றால் பிடிக்கும் என தெரிகிறது. குழந்தையின் உடலுடன் இந்த பிற பொருட்களையும் சேர்த்து வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பின்னணி என்ன: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2ஆம் தேதி சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த சிறுமியை காணவில்லை. பெற்றோரும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் சிறுமியை இன்னும் காணவில்லை என்பதால் அக்கம்பக்கம் தேடி பார்த்துள்ளனர்.
ஆனாலும் சிறுமி கிடைக்காததால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுமி எங்கோ நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதையடுத்து ரயில்நிலையம், பேருந்து நிலையம், உள்ளிட்ட இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனாலும் சிறுமி குறித்து எந்த துப்பும் துலங்கவில்லை. நேற்று முன் தினம் கூட 4 நாட்களாகியும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை என கூறி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்த நிலையில் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்காலில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மூட்டையை திறந்து பார்த்த போது சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த சிறுமியின் உடலை ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications