பெண்களுக்கு சலுகை..வெள்ளிக்கிழமை மட்டும் 6 மணி நேர வேலை..புதுச்சேரி அரசு அடி தூள் அறிவிப்பு
புதுச்சேரி: அரசு துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்று புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணிக்கு பதிலாக 11 மணி என்று பணிமாற்ற கோப்புக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. விரைவில் இது அமலுக்கு வர உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. பலரது எதிர்ப்பினை அடுத்து அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் அரசுத்துறையில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் வெறிநாய்க்கடி ஒழிப்பு பற்றிய செயல் திட்டம் வகுப்பது சம்மந்தமான இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி , "வீடு சுத்தப்படுத்துவது உள்பட பல பணிகள் வெள்ளிக்கிழமை இருக்கும். அதனால், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் பணிநேரம் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும். காலை 9 மணிக்கு பதிலாக 11 மணி என்று பணிமாற்ற கோப்புக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பெண்களுக்கு 2 மணி நேரம் வேலையில் சலுகை தர கோரிக்கை வைத்தேன். அதை முதல்வர் ஏற்றுள்ளார். தற்போது அரசு துறையில் அமலாகும். வெள்ளிக்கிழமை காலையில் பணிநேரத்தில் சலுகை தந்துள்ளார். வேலைபற்றி வேறு மாதிரி சொல்லிக்கொண்டிருக்கும்போது, புதுச்சேரியில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ரூ.1,000 செல்வ சலுகையும், நேர சலுகையும் தரப்படுகிறது. இதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன் என்றும் கூறினார்.
இதன் மூலம் பெண்கள் ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவார்கள். 12 மணி நேரம் பணி பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டியுள்ளது. உலகம் முழுவதும் இது செயல்படுத்துவதாக கருத்துதான் சொன்னேன். முதல்வர், அமைச்சர்கள் பேசிதான் புதுச்சேரியில் முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இதனிடையே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் வழக்கமான வெள்ளிக்கிழமைப் பூஜைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒரு மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகள் மட்டும் 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும்.
இதற்கான பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கோப்புக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி அளித்துள்ளார். அதன்படி சிறப்பு அனுமதி மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதனால், அரசு பணிகள் பாதிக்கப்படக் கூடாது.
பெண்கள் மட்டுமே பணிபுரியும் இடங்களில் சுழற்சி முறையில் அனுமதி வழங்கலாம். மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுமக்கள் சேவை, அத்தியாவசியப் பணிகளில் உள்ள பெண்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications