கொரோனா எதிரொலி.. சிறையாக மாறும் அரசு கல்லூரி.. புதிய கைதிகளை தனிமைப்படுத்த முடிவு!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் குற்ற வழக்குகளில் புதிதாக கைது செய்யப்படும் குற்றவாளிகளை அடைப்பதற்காக அரசு கலைக்கல்லூரி தற்காலிக சிறையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் மாஹே பிராந்தியத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
மேலும் நான்கு பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 3 பேர் மட்டுமே கொரோனா வைரசிற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பரவாமல் தடுக்க
இதை தொடர்ந்து புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. மேலும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்காலமாக புதிய சிறை
இந்நிலையில் புதுச்சேரி அரசு கல்லூரி தற்காலிக சிறைச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறை உள்ளது. இங்கு 200 விசாரணை கைதிகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் என 300 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையில் இருந்த 89 விசாரணை கைதிகள் ஏற்கனவே ஜாமினில் விடுவிக்கபட்டனர்.

வைரஸ் அச்சுறுத்தல்
இதனிடையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குற்ற வழக்குக்குகளில் புதிதாக கைது செய்யப்படும் கைதிகள் காலாப்பட்டு மத்திய சிறையில் அனுமதிப்பதில்லை. இதனால் பல்வேறு வழக்குகளில் புதிதாக கைது செய்யப்படுபவர்கள் ஜாமினில் உடனடியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தவிர்க்க புதிய நடவடிக்கை கையில் எடுக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் கல்லூரி
இந்நிலையில் புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கதிர்காமம் அரசு கலைக்கல்லூரி, தற்காலிக சிறைச்சாலையாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 4 நாட்களில் தற்காலிக சிறைசாலையாக செயல்படவுள்ள, இங்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, மருத்துவ குழு அமைக்கபடவுள்ளது. இங்கு அடைக்கப்படும் கைதிகள் தனிமைபடுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்த பிறகு, காலாப்பட்டு மத்தியசிறைக்கு மாற்ற சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications