புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் பேங்க் அக்கவுண்டில் ரூ.1000.. புத்தகப்பை, ஷூ வாங்க புதிய திட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் 80 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஷூ, புத்தகப்பை வாங்க, அந்த மாணவர்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக தலா 1,000 ரூபாய் செலுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் ஷூ வழங்குவது வழக்கமாக இருந்தாலும், தேர்தல் காலத்தில் அவற்றை நேரடியாக வழங்குவதில் சிரமங்கள் இருப்பதாகவும், இதனால் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக் கொள்ளும் வகையில் பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இயக்குநரகம் சார்பில் கம்பன் கலையரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, "விளையாட்டு வீரர்களுக்கு அனைவருக்கும் ஊக்கத்தொகை தர ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்வோம். கல்வித்துறையுடன் விளையாட்டுத்துறை இணைந்து இருந்ததால் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அதனால் தனித்துறையாக விளையாட்டுத்துறையை கொண்டு வந்துள்ளோம்.
பயிற்சியாளர்களுக்கு முன்பு ரூ. 10 ஆயிரம் ஊதியம் தந்த நிலையில், தற்போது ரூ. 50 ஆயிரம் தருகிறோம். சோர்ந்திருந்த பயிற்சியாளர்களுக்கு தெம்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கும் ஊதியம் உயர்த்தி தந்துள்ளோம். விளையாட்டில் அதிகளவில் பங்கு கொண்டு அதிக பதக்கம் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. போட்டியில் பங்கேற்க வடநாட்டுக்கு செல்ல பணம் இல்லாமல் சிரமம் படுவார்கள். தனிப்பட்ட முறையில் தந்தோம். இப்போது தனிநிதி ஒதுக்கி, வீரர்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலம் செல்ல அரசே உதவும்.
அரசு நிதியிலேயே இனி செல்லலாம். கிராமங்களில் விளையாட்டு திடல் அதிகம் தேவை. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டுதிடல்களை மேம்படுத்த ரூ.200 கோடி தருவதாக சொல்லியுள்ளார். பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் அரசு பணிக்கு சென்றுள்ளனர். இந்த நம்பிக்கையும் அரசு தந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு தந்துள்ளோம்.
அரசு பணியில் 5 ஆயிரம் பேருக்கும், தனியாரில் 8 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பை அளித்துள்ளோம். ஐடி பார்க், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகளை கொண்டு வரவுள்ளதால் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம். புதுச்சேரியில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பை, ஷூ வாங்கி தர தேர்தல் நேரத்தில் சிரமம். அதனால் இரண்டும் வாங்க ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். உடனடியாக 80 ஆயிரம் குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். குழந்தைகளின் பெற்றோரில் தாய் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications