கலவரமான போராட்டம்.. நடுரோட்டில் ரத்தம் சிந்திய அரசு ஊழியர்கள்.. புதுச்சேரியில் போலீஸ் தடியடி
புதுச்சேரி: புதுவையில் பொதுப்பணித் துறையில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வருவோர் தங்களை நிரந்தரம் செய்யக் கோரி புதன்கிழமை நடந்த போராட்டத்தில் திடீரெனப் பிரச்சினை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டோர் சிலர் காவலரைத் தாக்கிய நிலையில், பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் அந்த இடமே கலவரம் போலக் காட்சி அளித்தது.
புதுச்சேரியில் பொதுப்பணி துறையில் தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காகப் பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

போராட்டம்
இதற்கிடையே புதன்கிழமை பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாகக் குழப்பம் ஏற்பட்டது. அதாவது போராட்டக்காரர்கள் முதலில் புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிடப் போவதாக அறிவித்து போராட்டத்தை நடத்தினர். இதற்காகவே அங்குத் திரண்டு இருந்தனர்.
அப்போது புதுச்சேரி சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அப்போது நீண்ட நாட்களாகப் பணி நிரந்தரம் கோரி வரும் ஊழியர்கள், முதல்வர் காரை முற்றுகையிட முயன்றனர். அப்போது உடனடியாகத் தலையிட்ட போலீசார், அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதால் புதுச்சேரி முதல்வர் கார் பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
தடியடி
அதைத் தொடர்ந்தே பிரச்சினை வெடித்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காவலர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதில் அதில் பலரும் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கும் ரத்தம் வழிந்தது. அந்தளவுக்கு நிலைமை மோசமானது.
என்ன நடந்தது
அதாவது போராட்டக்காரர்கள் முதல்வர் காரை முற்றுகையிட விடாமல் போலீசார் தடுத்துள்ளனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கீழே சரிந்துள்ளார். இருப்பினும், போலீசார் தாக்கியதால் அந்த ஊழியர் காயமடைந்ததாகப் புரிந்து கொண்டனர். வலிப்பு ஏற்பட்ட ஊழியர் மயங்கிய நிலையில், அவருக்கு என்னவானது என பார்க்க, உதவி ஆய்வாளர் வந்துள்ளார். அவரை சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுவே நிலைமை கையை மீறிச் செல்லக் காரணமாக இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications